டிரெண்டிங்

சிவாஜி சிலையை அகற்றியதற்கு தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

சிவாஜி சிலையை அகற்றியதற்கு தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Rasus

சிவாஜிகணேசனின் சிலையை அகற்றியதற்காக சட்டமன்றத்தைக் கூட்டி தமிழக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிவாஜி கணேசன் சிலையை வைக்கும் போதே பல விஷயங்களை யோசித்திருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் சிலையை அகற்றியிருக்க கூடாது என்பதே என் கருத்து. இன்று இருக்கும் பல சிலைகளை தனிநபர்களா வைத்தார்கள்? யார் வைத்தார்கள்? இதற்காக சட்டசபையை கூட்டி தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனிடையே, கடற்கரை சாலையில் இருந்து அகற்றிய சிவாஜி சிலையை, மீண்டும் நிறுவ வேண்டும் என திரையுலகினர் வலியுறுத்தியுள்ளனர். ஃபெப்சி அமைப்பும், இயக்குநர் சங்கமும் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் சீமான், அபிராமி ராமநாதன், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, சிவாஜி தமிழர்களின் அடையாளம் எனவும், அதனால் கடற்கரையில் ஏதேனும் ஒரு இடத்தில் அவரது சிலை நிறுவப்பட வேண்டும் எனவும் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்தனர். ஒரு வேளை சிவாஜி சிலையை நிறுவ தாமதம் ஏற்பட்டால், அதற்காக போராட்டங்கள் நடத்தவும் தாங்கள் தயார் எனவும் அவர்கள் தெ‌ரிவித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "சிலையை எடுப்பதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். நள்ளிரவில் சிலையை அகற்றியுள்ளனர். அப்படியில்லையென்றால் அந்த நேரத்தில் முற்றுகையிட்டு பெரிய பிரச்னை வந்திருக்கும். கண்ணகி சிலையை எடுப்பதற்கு ஜெயலலிதாவிற்கு என்ன காரணம் இருந்ததோ அதே காரணத்தினால் தான் இந்த சிலையும் அகற்றப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவியவர் கருணாநிதி. ஜெயலலிதா சட்டப்பேரவை விட்டு திரும்பும்போது சிலையையும், அந்த பெயரையும் பார்க்க வேண்டியிருந்தது. இதுவே அகற்றப்பட காரணம். இந்த சிலை போக்குவரத்து இடையூறு என்றால் தமிழ்நாட்டில் நடுச்சாலைகளில் வேறு சிலைகள் இல்லையா? சிலைக்கு அருகில் மணிக்கூண்டு இருக்கிறதே?" என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி "இதுபோன்ற கலைஞன் உலகில் வேறுஎங்கும் பிறந்திருந்தால் அவர் உலகப் புகழ் பெற்றிருப்பார். அவரைப் போன்ற கலைஞன் உலகத்தில் எங்கும் இல்லை. உலகப் புகழை அடையாமல் போனதற்கு காரணம் அவர் ஒரு தமிழன். சரி குறைந்தபட்சம் மும்பையிலோ, டெல்லியிலோ பிறந்திருந்தால், இந்திய அளவில் புகழ் பெற்றார். எல்லா பட்டங்களும் அவர் காலில் குவிந்திருக்கும். ஆனால் இந்த புகழும், பட்டமும் கிடைக்காமல் போனதற்கு காரணம் அவர் ஒரு தமிழர் என்பதே ஆகும்" என்றார்.