தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மீது காங்கிரஸ் கட்சியை சார்ந்த கராத்தே தியகராஜன் இந்திய தேர்தல் ஆணையர்களிடம் புகார் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு நெருங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், தேர்தல் அதிகாரிகள் வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா, சுஷீல் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குநர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஓஜா ஆகியோர் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.அதில் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்ட கராத்தே தியகராஜன் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா மற்றும் சுஷீல் சந்திரா ஆகியோரிடம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மீது புகார் மனு அளித்தார்.
அந்த புகார் மனுவில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எந்த தொலைபேசி அழைப்பையும் எடுப்பதில்லை. குறுஞ்செய்தி அனுப்பினால் கூட பார்த்து பதில் அளிப்பதில்லை. எந்த தகவலையும் அவரிடம் நேரடியாக சொல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் இன்று நடந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டத்தில், தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.