டிரெண்டிங்

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது - திருமுருகன் காந்தி கண்டனம்

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது - திருமுருகன் காந்தி கண்டனம்

rajakannan

கந்துவட்டி கொடுமை குறித்து அரசுக்கு எதிராக கேலி சித்திரம் வரைந்ததாக கூறி கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதற்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் குறித்து பாலா கார்ட்டூன் ஒன்றினை தனது பேஸ்புக் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கடுமையாக விமர்சித்து அந்தக் கார்ட்டூன் வரையப்பட்டிருந்தது. இந்த கார்ட்டூன் சமூகவலைதளங்களில் மிகவும் வைரலாக பரவியிருந்தது. இந்த கார்ட்டூனுக்கு எதிராக மாவட்ட ஆட்சியரின் புகாரின் பேரில் பாலா இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த திருமுருகன் காந்தி, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதேபோல், கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் நெல்லையில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் செம்மணி இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். மேலும், இருவரையும் கைது செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.