விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆபாச வலைத்தளங்களைத் தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
தனிநபர் பிரச்னைகளுடன் வேண்டுமென்றே விடுதலை சிறுத்தைகள் கட்சியைத் தொடர்புபடுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் அவதூறு பரப்புவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் ராமதாஸ் மீது விரைவில் மானநஷ்ட வழக்கு தொடுக்கப்போவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கடலூர் மாவட்டத்தில் முகநூலில் அவதூறாக பதிவிட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரேம்குமார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், துயரச்சாவுகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வலிய இணைத்து அவதூறு பரப்பும் செயலில் பாமக ஈடுபட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
தனிநபர்களின் தனிப்பட்ட நட்புறவுகளுக்கோ, இன்னபிற நடவடிக்கைகளுக்கோ ஒரு இயக்கம் எப்படி பொறுப்பாக முடியும்? எனவும் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திட்டமிட்ட உள்நோக்கத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீது வீண் பழி சுமத்துவது எந்த விதத்தில் நியாயமாகும்? என வினவியுள்ள திருமவளவன், சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் ராமதாஸ் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஆபாச வலைதளங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும், சமூகவலைத்தளங்களின் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் எனவும் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.