திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை எனவும் காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு தனது முகநூலில் தலித்தை வேலைக்காரர்களாக வைத்திருக்கிறேன் என்று வைகோ கூறுவது சாதீய ஆதிக்கமாகவும், நிலபிரபுத்துவ ஆதிக்கமாகவும் பார்ப்பதாக பதிவிட்டிருந்தார். பின்பு அதை நீக்கிவிட்டார்.
இதையடுத்து சாத்தூரில் மதிமுக வாக்குச்சாவடிகள் முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வைகோ, வன்னியரசுவின் முகநூல் பதிவை கடுமையாக சாடினார். மேலும் ஆரம்ப காலகட்டத்தில் தேர்தல் செலவுக்காக திருமாவுக்கு 50 லட்சம் கொடுத்ததாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த திருமாவளவன், ”தேர்தல் செலவிற்காக நாங்கள் வைகோவிடம் பணம் பெற்றது உண்மை தான். தேர்தலுக்கு பணம் அளித்ததை ஏன் வைகோ கூறினார் என்பது புரியவில்லை. ஒருவரை விமர்சனம் செய்ய வேண்டுமானால், நேருக்கு நேர் துணிச்சலுடன் பேசுபவன் நான். யாரையும் தூண்டிவிட்டு விமர்சனம் செய்ய வைக்கும் அற்ப புத்தி எனக்கு கிடையாது” என தெரிவித்தார்.
இதனால் வைகோ-திருமாவளவன் ஆகிய இருவரிடையே இந்த விவகாரத்தில் கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று பகல் 12 மணிக்கு விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.
இதையடுத்து வைகோவும் திருமாவளவனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வைகோ, ”நரேந்திர மோடி அரசுக்கு எதிராக ஒரு அலை வீசுகிறது. 2019 ல் மாநில அரசின் கூட்டமைப்புகளும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைக்க போகிறது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் அணைப்பாதுகாப்பு மசோதாவை நிறைவெற்றிவிட மோடி அரசு துடிக்கிறது.
அவ்வாறு நிறைவேற்றிவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு தமிழகத்திற்குத்தான். இந்துத்துவா கூட்டம் உள்ளே நுழைய முடியவில்லை என்ற வெறுப்பில் இதையெல்லாம் செய்கிறார்கள். திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது. 5 மாநில தேர்தல் ஜனநாயகம் காக்கப்படும் என காட்டுகிறது. மேலும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் ஏற்படுத்துகிறது” என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சூது, சூழ்ச்சி, கள்ளம் இல்லாதவர் என தெரிவித்தார். கூட்டணி அமைக்கும் முன்னே திமுக உடையும் என சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் என்னாலும் வைகோவாலும் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது என தெரிவித்தார்.