மேற்கு வங்கத்தில் இஸ்லாமிய வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டிருப்பது பாஜகவுக்கு சாதகமாக அமையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் கால் பதிக்க பாரதிய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் பாஜகவின் சவாலை முறியடித்து தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியமைக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முனைப்பு காட்டி வருகிறார். அனல் பறக்கும் இந்த அரசியல் போட்டியில் இஸ்லாமிய வாக்குகள் சிதறுவது பாஜகவுக்கு சாதகமாக முடியக் கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கால் பதித்துள்ள அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி அடுத்த இலக்காக மேற்கு வங்கத்திலும் வலுவடைய திட்டமிட்டுள்ளது. மறுமுனையில் காங்கிரஸ் - இடதுசாரி அணியில் இணைந்துள்ள அப்பாஸ் சித்திக்கின் கட்சியும் இஸ்லாமிய வாக்குகளை கவர்வதற்காக காய் நகர்த்தி வருகிறது. இந்த இரண்டு கட்சிகளால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டிய கணிசமான வாக்குகள் சிதறும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மேற்கு வங்கத்தில் 30% வாக்கு வங்கியை கொண்டுள்ள இஸ்லாமியர்கள் தேர்தலின் முடிவை தீர்மானிக்க கூடிய முக்கிய சக்திகளில் ஒன்றாகவும் திகழ்கின்றனர். இவ்வாக்கு வங்கி சிதறுவது திரிணாமுல் காங்கிரசுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்கள் வாக்குகள் சிதறுவது பாஜகவுக்கு சாதகம் எனக் கூறப்படுகிறது. இந்த யூகம் எந்தளவுக்கு சரியானது என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.