டிரெண்டிங்

வீட்டில் திருட முடியாததால் வந்த ஆத்திரம்... இருசக்கர வாகனத்தை தீவைத்து எரித்த நபர்

kaleelrahman

காட்பாடி செங்குட்டை பகுதியில் வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய நபரை கண்காணிப்பு கேமரா மூலம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த செங்குட்டை பகுதியை சேர்ந்தவர் பிரேம் நவாஸ். இவர் தனது நண்பர் யோகராஜின் இருசக்கர வாகனத்தை தனது வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதில் நவாஸ் வெளியே வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். தீயை அணைக்க முயற்சித்தும் பலன் இல்லாமல் இருசக்கர வாகனம் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. 

 இதுகுறித்து பாதிக்கப்பட்ட நவாஸ் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அருகே உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பக்கத்து தெருவை சேர்ந்த அஜீத் என்பவர் இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை துணியில் நனைத்து வண்டியை கொளுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அஜீத்தை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இருசக்கர வாகனத்தை தீவைத்து கொளுத்திய அஜீத் கடந்த 5, 6 தேதிகளில் நவாஸ் வீட்டில் திருட முயன்றுள்ளார். அப்போது திருட முடியாததால் ஆத்திரம் அடைந்து தற்போது வீட்டின் வெளியே நிறுத்தி இருந்து இருசக்கர வாகனத்தை கொளுத்தியது தெரியவந்துள்ளது.