தமிழகத்தில் ஒரு தலைக் காதலால் நடைபெறும் கொலைகள் அதிகரித்துள்ளதாகவும், இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி முகநூலில் பதிவிட்டுள்ளார்.
நுங்கபாக்கம் சுவாதி தொடங்கி நேற்று முன்தினம் எரித்துக் கொல்லப்பட்ட இந்துஜா வரை தமிழகத்தில் ஒருதலைக் காதலால் நடைபெறும் கொலைகள் தொடர் கதையாக மாறி வருகிறது. இதுக்குறித்து திமுக எம்.பி கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், பெண்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களைப் பின்தொடரும் ஆண்களை கடுமையாகத் தண்டிக்கும் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் இது நான்காவது சம்பவம் என்றும் பெண்கள் மனதிலும் அவர்களின் குடும்பத்தாரின் மனதிலும் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க சடங்கள் இயற்றுவது தமிழக அரசின் கடமை என்றும் கனிமொழி கூறியுள்ளார். பிரச்சினைகள் வரும்போது மகளிர் காவல் நிலையங்களை அணுகினால் தமக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை முதலில் பெண்களுக்கு வரவேண்டும் என்றும் கனிமொழி அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.