டிரெண்டிங்

ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்; இன்று மாலைக்குள் விளக்கமளிக்க உத்தரவு!

JustinDurai
முதல்வர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக இன்று மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க திமுக எம்பி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது.
கடந்த 26ஆம் தேதி ஆயிரம் விளக்கு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட ஆ.ராசா முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ஆ. ராசா தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் இந்த பேச்சு தொடர்பாக குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பேச்சு தொடர்பாக ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஆ.ராசாவின் கருத்துகள் அவதூறானவை மட்டுமல்லாது, பெண்களின் தாய்மையை களங்கப்படுத்தும் வகையிலும் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அவரது பேச்சு தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பானவை எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது தொடர்பாக இன்று மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்கும்படி கூறியுள்ள தேர்தல் ஆணையம் அவ்வாறு செய்யத் தவறினால் ஆ. ராசாவை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.