டிரெண்டிங்

ஆடுகளை திருடியே சினிமா எடுத்த சகோதரர்கள்.. ஹீரோவாக நடித்தது அம்பலம்!

ஆடுகளை திருடியே சினிமா எடுத்த சகோதரர்கள்.. ஹீரோவாக நடித்தது அம்பலம்!

kaleelrahman

மாதவரத்தில் ஆடுகளை திருடி விற்று அந்த பணத்தைக் கொண்டு சினிமா எடுத்ததோடு சினிமாவில் நடித்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கம் ரிங் சென்டர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் 9ஆம் தேதி இவரது வீட்டில் வளர்த்த விலையுயர்ந்த ஆடு ஒன்று திருடு போயுள்ளதாக மாதவரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் மாதவரம் போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சிறப்பு படை போலீசார் குற்றவாளிகளை வலைவீசிதேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை மாதவரம் மஞ்சம்பாக்கம் ரிங் ரோடு அருகே காரில் வந்து இருவர் கீழே இறங்கி சாலையில் படுத்திருந்த ஆட்டை திருடிச் செல்வதற்காக நின்றிருந்த போது அங்கு மாறுவேடத்தில் நின்றிருந்த சிறப்பு படை போலீசார் அவர்களை லாவகமாக பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் புதுவண்ணாரப்பேட்டை ஆண்டியப்பன் 2 வது தெருவை சேர்ந்த நிரன்ஜன் (36) அவரது சகோதரர் லெனின் குமார் என தெரியவந்தது. பல வருடங்களாக காரில் வலம் வந்து இடத்தை நோட்டமிட்டு பின்னர் ஆடுகளை திருடி விற்று அதில் கிடைக்கும் பணத்தை கந்து வட்டிக்கு விட்டும் சினிமா படம் தயாரித்ததோடு 'நீதான் ராஜா' என்ற திரைபடத்தில் கதாநாயகனாக நடித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் வழக்குப்பதிவு செய்த மாதவரம் போலீசார் இருவரையும் கைது செய்து இவர்களிடம் இருந்த ஒரு மினி வேனை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.