டிரெண்டிங்

மதுரை எய்ம்ஸ் வளாகத்தில் இருந்த செங்கல்லை திருடிவிட்டார் -உதயநிதிமீது பாஜக நிர்வாகி புகார்

kaleelrahman

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செங்கல்லை திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக நிர்வாகி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சியினர் பரபரப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அப்படி பரப்புரைக்கு செல்லும் பகுதிகளில் ஒரு செங்கல்லை காண்பித்து இது எய்ம்ஸ் மருத்துமனை வளாகத்தில் இருந்த எடுத்து வந்த செங்கல். இந்த செங்கல்லின் மதிப்பு ரூ. 75 லட்சம். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இந்த செங்கல்லை வைத்ததோடு சரி மேற்கொண்டு எந்த வேலையும் நடக்கவில்லை என்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று கோவில்பட்டியில் பரப்புரை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் செங்கல்லை கையில் வைத்தபடி எய்ம்ஸ் மருத்துமனை விசயத்தை பேசினார். இந்நிலையில் பாஜக நிர்வாகி நீதி பாண்டியன் என்பவர் விளாத்திக்குளம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அறித்துள்ளார். அதில் உதயநிதி ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து செங்கல்லை திருடியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டுள்ளது.