முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கேட்டு தொடரப்பட்ட வழக்கை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள, “கலைஞரின் கடைசி யுத்தம்” என்ற புத்தகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வரும் - திமுக தலைவருமாக இருந்த கருணாநிதி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி மறைந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்ட நிலையில் தமிழக அரசு மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்றிரவே வழக்கு ஒன்றை தொடர்ந்து மெரினாவில் திமுக தலைவரை அடக்கம் செய்ய இடம் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கை மையமாகக் கொண்டு தனியார் தொலைக்காட்சியின் சிறப்புச் செய்தியாளர் ரமேஷ்குமார் “கலைஞரின் கடைசி யுத்தம்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி இருந்தார். இந்த புத்தகத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் அணிந்துரை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு இன்று (6.8.2020) சென்னை அண்ணா அறிவாலயத்தில், கலைஞரின் கடைசி யுத்தம் புத்தகத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதனை திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி, மாநிலங்களவை திமுக உறுப்பினர் வில்சன், மற்றம் என்.ஆர்.இளங்கோ, தலைமை நிலைய அலுவலக செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி முருகன், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், தனியார் தொலைகாட்சி சிறப்புச் செய்தியாளர் ஈவெரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.