டிரெண்டிங்

தஞ்சாவூர்: போலீஸ் அழைத்துச்சென்ற நகைக்கடை அதிபர் எங்கே?... அச்சத்தில் குடும்பம்..!

kaleelrahman

நகைக்கடை உரிமையாளரை அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவரை 2 நாட்களாக எங்கு வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. திடீரென கைலி மற்றும் மாத்திரை கேட்டு வாங்கிச் சென்றதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 


தஞ்சையை அடுத்துள்ள வல்லம் ஊரணி குளத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் அதேபகுதியில் நகைக்கடை மற்றும் அடகுக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இவரது கடைக்கு வந்த 4 பேர், தங்களை காவல்துறையினர் எனக் கூறியதோடு, கடை உரிமையாளர் ஆறுமுகத்திடம் எந்த விபரமும் கூறாமல் அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் ஆறுமுகத்தின் குடும்பத்திற்கு போன் செய்த காவல்துறையினர் தஞ்சை பைபாஸ் சாலைக்கு ஆறுமுகத்தின் கைலி மற்றும் அவர் தினம் பயன்படுத்தும் மாத்திரைகளை எடுத்து வரக் கூறியதால் ஆறுமுகத்தின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். காவல்துறையினர் கூறியதுபோல கைலி மற்றும் மாத்திரைகளை கொண்டு சென்றனர். 


அப்போதுகூட எந்தவித தகவலும் தெரியவிக்கவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். சாத்தான்குளத்தில் நடந்த கொடூர சம்பவம்போல் எதுவும் நடந்து விடக் கூடாது என கண்ணீர் மல்க கூறிய ஆறுமுகத்தின் மனைவி தனது கணவர் இன்று இரவுக்குள் வரவில்லை என்றால், குடும்பத்தோடு தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை எனக் கதறினார்.

காவல்துறையினர் நகைக்கடை உரிமையாளர்களை குறிவைத்து இதுபோன்று தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், விசாரணை எதுவும் செய்ய வேண்டும் என்றால் குறைந்தபட்சம் சங்க நிர்வாகிகளிடம் கூட தெரிவிக்காமல், குடும்பத்தினரை மிரட்டி நகைகளை பறிப்பதாகவும் வணிகர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து கூறிய காவல்துறையினர் நகை திருட்டு சம்பந்தமாகவும் அதனை வாங்கியது தொடர்பாகவும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.