டிரெண்டிங்

பியூஸ் கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு - கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை?

rajakannan

தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை அமைச்சர் தங்கமணி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். 

சென்னை வந்த பியூஸ் கோயலை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். அப்போது, விமான நிலையத்திலேயே தமிழக பாஜக தலைவர்களுடன் பியூஸ் கோயல் சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல், “தமிழகத்தில் அமைய இருக்கும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் வந்திருக்கிறேன். கூட்டணியால் கிடைக்கும் வெற்றி பிரதமர் மோடிக்கு வலு சேர்ப்பதாக இருக்கும். தமிழகத்தில் பாஜக கூட்டணி வலுவானதாக இருக்கும். பிரதமர் மோடியின் கரத்தை அது வலுப்படுத்தும். கூட்டணி குறித்து சரியான நேரத்தில் நல்ல செய்தி வெளியாகும்” என்று கூறினார். 

இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் இல்லத்திற்கு கோயல் சென்றார். அங்கு அமைச்சர் தங்கமணியும் சென்றார். இருவரும் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இந்த ஆலோசனையில் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.