சட்ட விரோதமாக மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் வருமான வரி சோதனையை இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு, அவரது மகனின் பள்ளி, கல்லூரிகளில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, திமுக பிரமுகரின் சிமெண்ட் கிடங்கு உள்ளிட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், தூத்துக்குடியில் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணையிலும் சோதனை நடத்தப்பட்டது. வருமான வரித்துறை சோதனை ஆளுநர் கட்சியினருக்கு ஆதரவாக தங்களை பரப்புரையில் ஈடுபடாமல் செய்வதற்காக செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்பப்பட்டுள்ளது. அதில் சூலூர், அரவக்குறிச்சி, திருபரங்குன்றம் மற்றும் ஓட்டபிடாரம் தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்ட விரோதமாக மத்திய அரசு நிகழ்த்தும் வருமான வரி சோதனையை உடனடியாக தடுக்க வேண்டும், தேர்தல் பணிக்கு நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விடுத்துள்ளது.