பிரதமர் மோடி பங்கேற்க்கும் பொதுக்கூட்ட திடலுக்கு கால்கோல் நடும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் “ ஸ்டாலின் நிலை தடுமாறி, வரம்பு மீறி பேசுகிறார்” என்று கடுமையாக சாடியுள்ளார்.
வரும் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் பகுதியில் பாஜக சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் அந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள திடலுக்கு கால்கோல் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மோடியின் ஆட்சி வளர்ச்சியின் ஆட்சி.வாக்கு சாவடி அளவிற்கு பலம் பொருந்தியவர்களாக மாற்றி வருகிறோம். அதனால் தான்“மீண்டும் மோடி வேண்டும் மோடி” என்ற கருத்தை வலியுறுத்துகிறோம்.
பிரதமர் மோடி தனக்கு வரும் பரிசுகளை ஏலம் விட்டு பெண் குழந்தைகள் படிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறார். மேலும் அத்தியாவசிய செலவுகளே செய்யப்படுகிறது, பல வகைகளில் அதனை மிச்சப்படுத்தப்படுகிறார்.நான்கரை ஆண்டுகளில் மோடியின் சாதனை அளப்பரியது. பொய் வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கி வருகிறது. ராகுல், பிரியங்கா என யார் வந்தாலும் மோடியை அசைக்க முடியாது” என்று கூறினார்.
இதனைதொடர்ந்து பேசிய அவர், “ஸ்டாலின் நிலை தடுமாறி பேசுகிறார். ஆறுமுக சாமி ஆணையத்தில் மோடியை விசாரிக்க சொல்கிறார், எதை பேசுகிறோம் என்று ஸ்டாலினுக்கு தெரியவில்லை. மத்திய அமைச்சரவை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 1300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 48 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் இயங்கும். ஸ்டாலின் வரம்பு மீறி பேசுகிறார். அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதே நல்லது. எதிர்கட்சிகள் மாற்று சக்திகளை போராட தூண்டப்படக்கூடாது. போராடுபவர்கள் தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொள்ள வேண்டும்.திருநாவுக்கரசர் நப்பாசையில் உள்ளார். நாங்கள் விட்டுக் கொடுத்து வாங்கும் நிலமையில் தான் நீங்கள் உள்ளீர்கள்.பிரதமர் வேட்பாளர் பலம் பொருந்தியவர். கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பிக்க வில்லை அதற்குள்ளாக சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்” என்று தமிழிசை கூறியுள்ளார்.