ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள தாமரை கோலத்தை அழித்த தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண வைபவ விழாவிற்காக தாமரை வடிவிலான கோலங்கள் சுண்ணாம்பு கலவையால் வரையப்பட்டிருந்தது. இந்த கோலங்கள் கட்சி சின்னமாக கருதப்படும் என்பதால் வெள்ளை சுண்ணாம்பு பூசி மறைக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாண்டு காலமாக பொது மக்கள் தாமரை கோலத்தை வரைவது வழக்கமான ஒன்றாகும் என்றும் மகாலட்சுமி அமர்ந்துள்ள மலர் என்பதால் மக்கள் அதை வரைவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
மத நம்பிக்கை அடிப்படையில் வரையப்பட்ட கோலத்தை கட்சி சின்னமாக கருதி அழித்த அதிகாரிகளின் செயலைக் கண்டிப்பதாக தமிழிசை தெரிவித்துள்ளார். தேர்தல் சின்னம் இடம் பெறக் கூடாது என்றால் கையை அகற்றி விடுவீர்களா. சூரியனை மறைத்து விடுவீர்களா என்றும் தமிழிசை வினவியுள்ளார். இந்து மத உணர்வுகளையும் வழக்கங்களையும் அதிகாரத்தால் அழிக்க முற்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்