டிரெண்டிங்

ரஜினி - கமல் அரசியலில் ஒன்றாக சேர வேண்டும்: தமிழருவி ஆசை

webteam

ரஜினி, கமல் அரசியலில் ஒன்றாக இணைந்து செயல்பட முன்வர வேண்டும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரான தமிழருவி மணியன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவரிடம் கமல் அரசியல் கட்சி தொடங்கவுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தமிழருவி மணியன், “ரஜினியும் சிஸ்டம் கெட்டுப்போய் உள்ளதாக கூறுகிறார். ரஜினிக்கு முன்பே சிஸ்டம் கெட்டுப்போய்விட்டது என்று நான் கூறினேன் என்று கமல் கூறியிருக்கிறார். இந்த சிஸ்டம் கெட்டுப் போனதற்கு மாறிமாறி ஆண்ட இரண்டு திராவிட கட்சிகள்தான் காரணம். ஆக ரஜினியும் கமலும் இருவரும் தனித்தனியாக கட்சியை ஆரம்பிக்காமல் இணைந்து செயல்பட முன் வர வேண்டும். அவ்வாறு செய்யாமல் தனித்தனியாக கட்சி ஆரம்பித்தால் அது திமுகவுக்கு சாதகமாக போய்விடும். அப்படி நடக்க இவர்கள் வழி ஏற்படுத்தித் தரக் கூடாது” என்று கூறினார்.

தமிழருவி மணியன் ஏற்கனவே ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வலியுறுத்தி மாநாட்டையே நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.