தமிழக மாணவர்களின் மருத்துவ கல்வியை தட்டிப்பறிக்க நீட் தேர்வைப் பயன்படுத்தி மத்திய அரசு குழப்பம் விளைவிப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வு மே 6ஆம் தேதி நடக்கும் நிலையில், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில்தான் தேர்வு மையங்கள் ஒதுக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தேர்வு மைய விவரங்களை வெளியிடாதது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பங்களை சரி செய்து தேர்வு மையங்களை மாநிலத்திற்குள்ளேயே ஒதுக்கி சட்டத்தை மீறிய கெடுபிடிகள் ஏதுமின்றி, முறையாக தேர்வு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அதனை மத்திய அரசு தன்னிச்சையாக நிறைவேற்ற முடியாது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருப்பதாகவும், நீட் தேர்வுக்கு விலக்கு அளியுங்கள் என தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியும், தொடர்ந்து நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசு ஆயுர்வேதம், சித்தா படிப்புகளுக்கும் நீட்டை கட்டாயமாக்கியது ஏன் என வினவியுள்ளார். ஆயுஷ் படிப்புகளுக்கு 2018 - 2019 கல்வியாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் என்ற முடிவினை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது