டிரெண்டிங்

கொரோனாவைவிட திமுகவைப் பார்த்து தமிழக அரசு பயப்படுகிறது: மு. க.ஸ்டாலின்

webteam

அரசின் தடையை மீறி திருவள்ளூர் மாவட்டம், ஜமீன் கொரட்டூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அதிமுக செயற்குழு கூட்டத்தைக் கூட்டியபோது பரவாத கொரோனா, கிராம சபைக் கூட்டத்தால் பரவுமா என கேள்வி எழுப்பினார்.

விவசாயிகளை வஞ்சிக்கும் திட்டங்களை திரும்பப் பெறு என அச்சிட்ட முகக்கவசத்தை ஸ்டாலின் அணிந்திருந்தார். தனிமனித இடைவெளியைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது கிராம மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், "வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை திமுக போராட்டத்தைக் கைவிடாது" என்றார். மக்களுக்கு உள்ள குறைகளை போக்குவதற்குத்தான் இதுபோன்ற கூட்டங்கள் நடைபெறுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனாவைவிட திமுகவைப் பார்த்து தமிழக அரசு பயப்படுவதாகவும், அதிமுக செயற்குழுவால் கொரோனா பரவாதா? எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். வேளாண் சட்டங்களை ரத்து செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.