டிரெண்டிங்

திமுகவை களங்கப்படுத்தவே வருமானவரித்துறை சோதனை - ஸ்டாலின்

திமுகவை களங்கப்படுத்தவே வருமானவரித்துறை சோதனை - ஸ்டாலின்

webteam

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக முன்மொழிந்ததால்தான் திமுகவினர் மீது வருமான வரித்துறை சோதனை நடத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டபோது இவ்வாறு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு , வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த முக்கிய விவகாரங்களும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை எனவும் திமுகவின் தேர்தல் அறிக்கை ஹீரோ என்றால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ எனவும் தெரிவித்தார். 

மோடி ஏழைத்தாயின் மகன் என கூறுகிறார் எனவும் அவ்வாறு இருந்தால் விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் இருந்திருப்பாரா எனவும் கேள்வி எழுப்பினார். மோடியால் ஏழைகள் பரம ஏழைகளாக மாறிக்கொண்டிருப்பதாகவும் மோடி காவலாலி அல்ல களவானி எனவும் விமர்சித்தார்.

தொடர்ந்து, சிதம்பரம் மக்களவைத்தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், தமிழக மக்களின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார். 

மயிலாடுதுறை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரைச் செய்தார். அப்போது, சாதனைகளை எடுத்துக்கூறி, மக்களிடம் வாக்கு கேட்க முடியாத அதிமுக, எதிர்கட்சிகளை விமர்சித்து பரப்புரை செய்வதாக குற்றஞ்சாட்டினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணம், கோடநாடு கொலை விவகாரம், பொள்ளாட்சி பாலியல் வழக்கு ஆகிவற்றை குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.