டிரெண்டிங்

எல்லாவற்றையும் தலைகீழாகச் செய்வதுதான் அதிமுக அரசா? ஸ்டாலின் கேள்வி

webteam

பள்ளிகள் திறப்பை அறிவிப்பதற்கு முன்பே கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தாதது ஏன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதென நிரூபிக்கப்படாத நிலையில், அவசரமாக பள்ளிகளை ஏன் திறக்க வேண்டுமென கேள்வி எழுப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக சொல்லி பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்கவில்லை என்று கூறுவதற்காக, கண்துடைப்பு கருத்துக்கேட்பு நாடகத்தை அரசு அரங்கேற்றுவதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இந்தக் கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி முடிவை பள்ளிகள் திறப்பை அறிவிப்பதற்கு முன்பே அல்லவா செய்திருக்க வேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றையும் தலைகீழாகச் செய்வதுதான் அதிமுக அரசா என்றும் ஸ்டாலின் வினவியுள்ளார்.

மேலும், ஆந்திராவில் பள்ளிகள் திறப்பால், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்றி இருப்பது அரசுக்கு தெரியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.