டிரெண்டிங்

ராஜபட்ச பிரதமராக தொடர இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை

rajakannan

இலங்கை பிரதமராக மஹிந்தா ராஜபக்ச தொடர இடைக்காலத் தடை விதித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவை அக்டோபர் 26-ம் தேதி புதிய பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேன. ராஜபக்ச பிரதமராக பதவியேற்றது முதல் இலங்கை அரசியலில் ஒரு குழப்பமான நிலை நீடித்து வருகிறது. ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதை உணர்ந்து கொண்ட அதிபர் சிறிசேன, கடந்த நவம்பர் 9 நாடாளுமன்றத்தை கலைத்து அதிரடியாக உத்தரவிட்டார். அதோடு, ஜனவரி 5 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்ட அதிபர் சிறிசேனவின் உத்தரவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிபர் சிறிசேனவின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. மேலும், பொதுத் தேர்தலுக்கான பணிகளுக்கு தடைவிதித்ததோடு, நாடாளுமன்றம் நடைபெற தடையில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. 

உச்சநீதிமன்றம் தடைகளை நீக்கியதை அடுத்து நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா திர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில், ராஜபட்ச தோல்வி அடைந்தார். இருப்பினும், ரணில் விக்ரமசிங்க பிரதமராக முடியவில்லை. புதிய பிரதமரை நியமிக்கும் அதிகாரமும் தன்னிடம்தான் உள்ளது என அதிபர் சிறிசேனா கூறி வந்தார். 

இதனையடுத்து, கடந்த மாதம் நடைபெற்ற இரண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த நிலையிலும் பிரதமராக ராஜபட்ச தொடர்ந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 122 எம்.பிக்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில், பிரதமராக மஹிந்தா ராஜபக்ச தொடர இடைக்காலத் தடை விதித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அவர் தலைமையிலான அமைச்சர்களும் அந்தப் பதவியில் தொடர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை டிசம்பர் 12, 13 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.