டிரெண்டிங்

சட்டப்பேரவை பாரம்பரியத்தை குழிதோண்டி புதைத்துவிட்டார் சபாநாயகர்: துரைமுருகன்

சட்டப்பேரவை பாரம்பரியத்தை குழிதோண்டி புதைத்துவிட்டார் சபாநாயகர்: துரைமுருகன்

rajakannan

சட்டப்பேரவைக்கு உண்டான பாரம்பரியத்தை சபாநாயகர் குழிதோண்டி புதைத்துவிட்டதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் தினகரன் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சபாநாயகரின் நடவடிக்கையை கடும் கண்டனம் தெரிவித்த துரைமுருகன், ஒருதலைபட்சமாக செயல்படும் சபாநாயகர் எதிர்க்கட்சி உறுப்பினர்களை எப்படி நியாயமாக வழிநடத்துவார்? என்று கேள்வி எழுப்பினர். 

மேலும், இது ஒரு ஜனநாயக படுகொலை என்றும் களத்தில் நின்று உண்மையான வெற்றிபெற முடியாதவர்கள் செய்யும் செயல் இது என்றும் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார். இதனிடையே இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலை பொறுத்தவரை நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் நிவாரணம் கிடைக்க வாய்ப்பு என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவே தந்திரமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், இது ஒரு ஜனநாயக படுகொலை என்றும் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.