டிரெண்டிங்

சொத்துக்காக தாய்க்கு கரண்ட் ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்திய கொடூரன்

webteam

சொத்துக்காக பெற்ற தாயை மின்சாரம் செலுத்தி ஒருநாள் முழுவதும் வீட்டுக்குள் அடைத்து வைத்து மகன் சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி புள்ளம்பாடியைச்சேர்ந்த லட்சுமி என்றவர், தனது மகனிடம் இருந்து சொத்துகளை மீட்டுத்தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். 2010ல் கணவர் கோபால் இறந்துவிட்டதால் மகன் ஜோதிமணியுடன் இணைந்து, கோபாலின் ஹாலோ பிளாக் தொழிலை நடத்தி வந்தார் லட்சுமி. அதன்பிறகு தன்னை துன்புறுத்தி சொத்துகளை கேட்டு மகன் மீது மிரட்டுவதாக லட்சுமி புகார் அளித்துள்ளார்.

பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், நகைகளை கேட்டு வீட்டைவிட்டு விரட்டிவிட்டதாக கூறியுள்ள லட்சுமி, வீட்டுக்குள் தன்னை அடைத்து வைத்து மின்சாரம் செலுத்தி சித்ரவதை செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். தன்னை சித்தரவை செய்வது குறித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், புள்ளம்பாடி காவல்நிலையத்தில் கடந்த பத்தாம் தேதி மீண்டும் புகார் அளித்துள்ளார்.

தற்போது மகள் வீட்டில் வசித்துவரும் சூழலில், அங்கும் வந்து மகன் மிரட்டுவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். தாய் இறந்தால், சொத்தில் அக்காவுக்கும் பங்கு அளிக்க வேண்டியிருக்கும் என்பதால், முன்கூட்டியே அனைத்து சொத்துகளையும் தன்பெயரில் எழுதிக்கொள்ள மகன் தன்னை துன்புறுத்துவதாக அந்த மூதாட்டி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.