டிரெண்டிங்

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டும் இலங்கை கிரிக்கெட் வாரியம்!

JustinDurai

ஐபிஎல் 14-வது சீசன் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது. 

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகளின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, வேறு வழியின்றி எஞ்சிய 31 ஆட்டங்களை பிசிசிஐ ஒத்திவைத்தது. 

பாதியிலேயே தள்ளிவைக்கப்பட்டு உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய ஆட்டங்களை நடத்த இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணிகள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியமும் ஐபிஎல் தொடரை நடத்த ஆர்வம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுனா டி சில்வா கூறுகையில், ''ஆம் கண்டிப்பாக நாங்கள் ஐபிஎல் தொடரை செப்டம்பரில் நடத்த அனுமதி கோருவோம். ஐக்கிய அரபு அமீரகம் தான் பிசிசிஐயின் தேர்வாக இருப்பதாக கேள்விப்பட்டோம். ஆனாலும் இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தால் அதை நிராகரிக்க எந்த காரணமும் இருக்க முடியாது. 

லங்கா பிரிமீயர் லீக்கை ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே அதற்கு செய்யப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, சரியான உட்கட்டமைப்புகளுடன் ஐபிஎல் தொடரை செப்டம்பரில் நடத்த தயாராக உள்ளோம்'' என்றார்.