பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு அவரது சொந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே கோணேட்டம் பேட்டை கிராமத்தில் சாம்பாமூர்த்தி சகுந்தலம்மாள் தம்பதியரின் 6 குழந்தைகளில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் ஒருவர். இவர் தனது சிறுவயதை பள்ளிப்பட்டு பகுதியில் கழித்தார். பொறியாளர் ஆக வேண்டும் என்று வாழ்நாள் லட்சியமாக கொண்ட எஸ்.பி.பி அந்த பாதையிலிருந்து விலகி பின்னணி பாடகராக வாழ்க்கை பயணத்தை தொடங்கி 15 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் போற்றப்பட்டார்.
பாடகராக உலகம் முழுவதும் போற்றப்பட்டாலும், நேரம் கிடைக்கும் போதெல்லம் சொந்த கிராமத்திற்கு வந்து தனது பழைய நண்பர்களுடன் சகஜமாக பேசி பழகுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார் என கிராமமக்கள் பெருமையுடன் குறிப்பிட்டனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்பதை விட கோணேட்டம் பேட்டை பாலு என்றே கிராமமக்கள் பாசத்துடன் அழைப்பதை பெரிதும் விரும்பவதாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது 71 வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் மத்தியில் சொந்த கிராமத்தில் கொண்டாடிய தருணத்தில் குறிப்பிட்டிருந்தார்.
தனது சொந்த கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை தனது சொந்த பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்ததோடு கிராமத்தில் இருந்த பள்ளிக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார். பாடும் நிலா பாலசுப்ரமணியத்தின் மறைவு கோணேட்டம் பேட்டை கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.