டிரெண்டிங்

பெங்களூருவில் 144 தடை உத்தரவு - பதவி விலகுகிறாரா குமாரசாமி?

rajakannan

கர்நாடக மக்கள் 6 கோடி பேரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி பேசியுள்ளார்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக முதல்வர் குமாரசாமி பேசிவருகிறார். அப்போது, “நான் முதலமைச்சராக இருக்க காரணமான காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தவறுகளை சரிசெய்யும் நேரம் இது. சட்டத்தில் விதி 10 குறித்தோ அல்லது வேறு சட்ட நுணுக்கம் குறித்தோ பேச விரும்பவில்லை.

காங்கிரஸ் - மஜத ஆட்சி அமைந்த நாள் முதல் பாஜகவினர் குதிரை பேரத்தை தொடங்கிவிட்டனர். அரசியலுக்கு வர ஆசை இல்லை என்றாலும் காலத்தின் கட்டாயத்தினால் அரசியலுக்குள் நுழைந்தேன்” என்று குமாரசாமி பேசினார்.

கர்நாடகாவில் நிலவி வரும் குழப்பமான அரசியல் சூழலில் பெங்களூர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூலை 25 ஆம் தேதி மாலை 6 மணி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். மதுபான கடைகள், பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, முதல்வர் குமாரசாமி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் குமாரசாமியின் பேச்சு அதனை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக தெரிகிறது.

இதனிடையே, பாஜக ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏக்கள் பேரவைக்கு வரக்கூடாது என தடுத்து நிறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு முன் இந்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் - பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.