டிரெண்டிங்

கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு வேனில் கடத்த முயன்ற 1,230 மதுபாட்டில்கள் பறிமுதல்!

Veeramani

தமிழக தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் நாளை முதல் 3 நாள்கள் மூடப்படவுள்ள நிலையில், கர்நாடகாவில் இருந்து வேனில் கடத்த முயன்ற 1,230 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு 3 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், நாளை மாலை 7 மணிக்கு பிரசாரம் ஓய்கிறது. தேர்தலையொட்டி தமிழகத்தில் நாளை முதல் 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. தேர்தல் நாளான்று வாக்காளர்களுக்கு மதுபாட்டில் வழங்க, அரசியல் கட்சியினர் கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து, மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தாளவாடி தொட்டகாசனூரில் ஆலம்மாள் என்பவரின் வீட்டில் 654 மதுபாட்டில்களும், சூசைபுரம் மனோகர்லால் ஜெயின் என்பவரது வீட்டில் 576 மதுபாட்டில்களும் என மொத்தம் 1,230 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கர்நாடகாவில் இருந்து வேனில் மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வீட்டில் பதுக்கி வைத்திருந்து, தேர்தல் நாளான்று விநியோகிக்க தயாரானபோது மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சூசைபுரத்தைச் சேர்ந்த மனோகர்லால் ஜெயின் மற்றும் தொட்டகாஜனூரைச் சேர்ந்த ஆலம்மாளை காவல்துறையினர் கைது செய்தனர். தேர்தல் நெருங்குவதால் இரு மாநில எல்லையில் வரும் வாகனங்களை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.