டிரெண்டிங்

தருமபுரியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறை கணக்கிற்கு மாற்றம் !

தருமபுரியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறை கணக்கிற்கு மாற்றம் !

webteam

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 3 கோடியே 47 லட்சம் ரூபாய் பணம் வருமானவரித்துறை கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் இருந்து தருமபுரி சென்ற அரசு பேருந்தை பையர்நாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அப்போது அரசு பேருந்தை சோதனை நடத்தியதில் 7 பைகள் கேட்பாரற்று கிடந்ததால் அது குறித்து விசாரணை ‌நடத்தப்பட்டது. தொடர்ந்து பேருந்தில் இருந்தவர்களிடம் விசாரித்ததில், யாரும் தெரியவில்லை கூறியுள்ளனர். பேருந்தில் யாரும் உரிமைக்கோராத அந்த பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததைக் கண்டு தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பையில் மொத்தம் 3 கோடியே 47 லட்சத்து 51ஆயிரத்து 100 ரூபாய் இருந்துள்ளது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டியிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் ஓட்டுநர், நடத்துநரிடம் நடத்தப்பட்ட‌ விசாரணையில், போக்குவரத்துக்கழக ஊழியர் செல்வராஜ் அந்த பைகளுடன் பேருந்தில் ஏறியதாக கூறினர். இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் செல்வராஜ் என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அந்த பணம் திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடையது எனத் தெரியவந்துள்ளது. மேலும், போக்குவரத்துக்கழக ஊழியர் செல்வராஜும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது சந்தேகம் எழுந்தது.

அதனைதொடர்ந்து செல்வராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோருடன் தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் ‌வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பணம் கொண்டுவரப்பட்ட பையில் இருந்து அடையாள அட்டையும், வங்கி கணக்கு புத்தகமும் கண்டெடுக்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் அரசு பேருந்தில் கட்டுக்கடாக பறிமுதல் செய்த 3 கோடியே 47 லட்சம் ரூபாய் பணம் யாரும் உரிமை கோராத காரணத்தால் வருமானவரித்துறை கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும்  தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செல்வராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோருடன் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.