ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனுக்குள் நுழைய முயன்ற வெற்றிவேல் உள்ளிட்ட டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மறைந்தார். இதனையடுத்து அவர் வாழ்ந்த இல்லமான போயஸ் கார்னிடல், ஜெயலலிதாவுக்கு மாதந்தோறும் திதி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று திதி கொடுப்பதற்காக புரோகிதர்கள் போயஸ் கார்டனுக்குள் சென்றிருக்கின்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவான வெற்றிவேல் உள்ளிட்ட டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் போயஸ் கார்டன் அருகே குவிந்தனர். தங்களையும் போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்க வேண்டும் எனக்கூறி அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. மேலும் வழக்கத்தை விடவும் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், “போயஸ் கார்டனுக்குள் எங்களை கூட விட வேண்டாம். ஆனால் புரோகிதர்களை மட்டுமாவது உள்ளே அனுமதிக்குமாறு கேட்டோம். ஜெயலலிதா வீட்டினுள் ஜெயலலிதாவிற்கே திதி கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு எடப்பாடி அரசுதான் காரணம்” என்றார்.