எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல தடை விதிக்க கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “விழாவில் கூட்டத்தை காண்பிப்பதற்காக அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் சனி, ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்காக மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் எந்த அனுமதியும் பெறுவதில்லை. மாலையில் தொடங்கும் நிகழ்ச்சிக்கு காலையிலேயே மாணவ-மாணவிகள் அழைத்து செல்லப்படுவதால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். விழாவுக்கு அழைத்துச் செல்லப்படும் மாணவ-மாணவிகளுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி செய்து கொடுப்பதில்லை. எனவே, இதுபோன்ற அரசியல் பொது நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவ-மாணவிகளை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.
பள்ளி வளாகத்திற்கு வெளியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள், அரசு சம்பந்தமான விழிப்புணர்வு ஊர்வலங்கள், பிரசாரங்களில் பள்ளி குழந்தைகளை பங்கேற்க செய்யும் போது அவர்களது பாதுகாப்பு கருதி என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பாக விதிமுறைகளை உருவாக்க தமிழக தலைமை செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் தலைமை செயலாளர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், தமிழக போலீஸ் டி.ஜி.பி., குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதனையடுத்து, பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் இன்று தாக்கல் செய்த மனுவில், “எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அரசியல் விழாவாக கொண்டாடப்படவில்லை என்றும், காலையில் நடைபெறும் புத்தாக்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கே மாணவ மாணவிகள் அழைத்து வரப்படுகின்றனர். மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் விருப்பப்பட்டே புத்தாக்க சொற்பொழிவுக்கு வருவதால், தடையை நீக்க வேண்டும்” என்று கோரப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இன்றைய சூழலில் விவேகானந்தர் பேசினால் கூட தொடர்ந்து 2 மணிநேரம் 100 பேர் அமர்ந்து கேட்பது கடினம். குழந்தைகளின் சிரமத்தைவிட அரசின் பெருமை பேசுவது முக்கியமா? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த நிகழ்ச்சியில் சிபிஎஸ்இ மாணவர்களை ஏன் அழைத்து செல்லவில்லை என்றும், புத்தாக்கசொற்பொழிவுகளை சனிக்கிழமைகளில் ஆண்டுதோறும் ஏன் நடத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடலாம் என்றும் ஆனால் அதில் எவ்வித விதிமுறைகளும் மீறாமல் இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
இறுதியாக, தடையை நீக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். நீதிபதிகள் தமது உத்தரவில், “20 சதவீதம் மாணவர்கள்தான் நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரே இடத்தில் மாணவர்கள் எத்தனை மணி நேரம்தான் மாணவர்கள் உட்கார்ந்திருப்பார்கள்? என்று கேள்வி எழுப்பினர். அதே சமயத்தில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவர்கள் பரிசு பெற தடையில்லை என்று தெரிவித்தனர்.