டிரெண்டிங்

ஓபிஎஸ் கையால் பரிசு ‘வரும் ஆனா வராது’.. மாணவர்கள் ஏமாற்றம்!

webteam

துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் 10 பரிசுகளைக்கொண்டு 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

தேனியில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பல போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வென்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். அவரிடமிருந்து பரிசுகளை பெற்றுக்கொண்டு மாணவர்கள் செல்லும் போது, கேமராக்களை தாண்டியவுடன் பரிசுப்பொருட்களை சிலர் வாங்கிக்கொண்டனர். அந்த பரிசுப்பொருட்கள் திரும்பவும் பன்னீர்செல்வத்தின் கைகளுக்கே சென்றது. தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இதே பாணியில் பரிசு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது. 

ஆனால் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள அதிமுக தேனி வட்டாரங்கள், மேடையில் இருந்தது 10 பரிசு தான் என்றும், அதனால் அதை வைத்தே போட்டோக்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது. அத்துடன், அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிக்கு சென்ற பின் பரிசு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்து, மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு விருந்தாகிவிட்டது.