ரமலான் பண்டிகையைக் கொண்டாட முடியாமல் ஏழ்மையில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்குப் பள்ளி மாணவி உதவி செய்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட செய்யாறு அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரோஷிணி. இவர் தினமும் ஜாஃபர் என்பவரின் ஆட்டோவில் பள்ளிக்குச் சென்று வந்தார். வறுமை நிலையிலிருந்த ஜாஃபர் கொரோனா பொது முடக்கத்தால் குடும்ப செலவுகளுக்குக்கூட வழியற்று இருந்துள்ளார். இதனால் அவரது ரம்ஜான் பண்டிகை கலை இழக்கும் நிலைக்கு வந்தது.
அவரது இந்த நிலையை உணர்ந்த மாணவி ரோஷிணி, தான் சிறுக சிறுக உண்டியலில் சேர்த்த பணத்தை ஆட்டோ ஓட்டுநருக்கு வழங்குவதாகப் பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்தார். விருப்பம் தெரிவித்த மாணவியின் பெற்றோர், அந்தப் பணத்தில் பிரியாணி செய்தலாவதற்குத் தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கினர். அதனை ஆட்டோ ஓட்டுநர் ஜாஃபருக்கு வழங்கினர்.
மேலும், செலவுக்காக ரூ.500-ம் கொடுத்தனர். அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. மாணவியின் இந்தச் செயல் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.