டிரெண்டிங்

சாத்தான்குளம் கொலை வழக்கில் தேடப்படும் காவலரின் பைக் பறிமுதல்

webteam

சாத்தான்குளம் தந்தை-மகன் சித்ரவதை கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் காவலர் முத்துராஜ் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ், சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 5 காவலர்களில், ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 4 காவலர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, கைது நடவடிக்கை குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த காவலர் முத்துராஜ், காவல்துறையின் விசாரணை அழைப்பை நிராகரித்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

சிபிசிஐடி காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வரும் நிலையில், முத்துராஜ் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார். இதனிடையே, காவலர் முத்துராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள சிபிசிஐடி, அவரை கைது செய்யும் பணியை முடுக்கியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்குள் காவலர் முத்துராஜ் பிடிபடுவார் என சிபிசிஐடி ஐ.ஜி.சங்கர் தெரிவித்துள்ளார். இதனிடையே கோவில்பட்டி அல்லது விளாத்திக்குளம் நீதிமன்றத்தில் முத்துராஜ் சரணடைய உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் விளாத்திகுளம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனத்தை முத்துராஜ் உடையதோ என்ற கோணத்தில் ஆய்வு செய்தனர்.
இதில் அந்த இருசக்கர வாகனம் முத்துராஜினுடையது தான் என்பது உறுதியானது. இதையடுத்து அந்த வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்தப் பகுதியில் எங்காவது முத்துராஜ் பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.