டிரெண்டிங்

சசிகலா சமையலறை விவகாரம்: தகவலை மறைத்ததா டெல்லி காவல்துறை?

சசிகலா சமையலறை விவகாரம்: தகவலை மறைத்ததா டெல்லி காவல்துறை?

webteam

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தர சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக டெல்லி காவல்துறையினருக்கு கடந்த ஏப்ரல் மாதமே தெரியும் என்பது  தற்போது தெரியவந்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுவது தொடர்பாக கர்நாடக முன்னாள் உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரனின் உதவியாளர் என கூறப்படும் வி.சி.பிரகாஷிடம் டெல்லி காவல்துறையினர் கடந்த ஏப்ரலில் விசாரணை நடத்தினர். அப்போது டிடிவி.தினகரனின் நண்பர் மல்லிகர்ஜூனாவைத் தனக்குத் தெரியும் என போலீசில் பிரகாஷ் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிகிறது. சிறைத்துறை அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் 2 கோடி ரூபாய் பணம் கொடுத்தார் என அவர் கூறியதாகவும் தெரிகிறது. எனினும் சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்கப்பட்டது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்துதர அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா தாக்கல் செய்த அறிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் டெல்லி காவல்துறைக்கு இந்த தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.