போதிய ஆவணங்களுடன் பரோல் மனு தாக்கல் செய்யுமாறு கூறிய நிலையில், விளக்கக் கடிதத்துடன் சசிகலா தரப்பில் மீண்டும் பரோல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது கணவரான நடராஜன் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தனது கணவரை சந்திப்பதற்காக 15 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனக்கூறி சசிகலா சார்பில் கர்நாடக சிறைத்துறையிடம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை, தொழில்நுட்ப காரணங்களால் கர்நாடக சிறைத்துறை நிராகரித்தது. அத்துடன் சசிகலா தாக்கல் செய்துள்ள மனுவில், பரோல் அளிக்கத் தகுந்த ஆவணங்கள் இல்லை எனக் கூறிய சிறைத்துறை, கூடுதல் தகவல்களுடன் புதிய மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. இந்த சூழலில் பரோலின் காரணங்கள் குறித்த விளக்கக் கடிதம் ஒன்றையும் இணைத்து, புதிய பரோல் மனு சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.