டிரெண்டிங்

லாரியில் இருந்து கொட்டிய தண்ணீர்... உஷாரான போலீஸ்...!

kaleelrahman

வேடசந்தூர் அருகே நூதன முறையில் மணல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நால்ரோட்டில், வேடசந்தூர் காவல்நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வேடசந்தூர் நோக்கி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் கிரஷர் மண் இருந்தது. ஆனால் லாரியில் இருந்து தண்ணீர் கொட்டுவதை போலீசார் பார்த்துள்ளனர். 

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியின் மேல் ஏறி கிரஷர் மண்ணை தோண்டிப் பார்த்த போது மேலாக மட்டுமே கிரஷர் மண்ணும் கீழ் பகுதி முழுவதும் மணலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த பழனியைச் சேர்ந்த மணிகண்டன், தொட்டணம்பட்டியைச் சேர்ந்த பழனிமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்து திருட்டு மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.