எட்டு மணிநேரம் ஷிஃப்ட் கணக்கில் வேலை என மேம்போக்காக கூறப்பட்டாலும் பல நிறுவனங்களிலும் டெட்லைனை கடந்து வேலை பார்ப்பவர்களே இங்கு ஏராளம். வேலைப்பளு அதிகரிப்பதன் காரணமாக மனநலம் சார்ந்த பிரச்னைகளும் கூடவே அதிகரிக்கின்றன.
இதேபோல எட்டு முதல் ஒன்பது மணிநேரம் வேலையாக நிர்ணயிக்கப்பட்டாலும் ஒரே இடத்திலேயே உட்கார்ந்தபடி வேலை பார்ப்பதாலும் பல் உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க, கட்டுப்படுத்த ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு பல முன்னெடுப்புகளும் உலகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, பணிநேரத்தில் Nap எடுக்கும் முறைகள், பிரேக் எடுத்து சற்று நேரம் வெளியே ரிலாக்ஸ் செய்வது போன்ற பல செயல்பாடுகள் நடைமுறைத்தப்பட்டு வரும் வேளையில், பிரபல சாம்சங் நிறுவனம் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கட்டாயமாக வேலை செய்வதை தடுக்கும் வகையில் Balance mouse என்ற புதிய வகை மவுஸை தயாரித்திருக்கிறது.
அதன் சிறப்பம்சம் என்னவென்றால், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மவுஸ் வேலை செய்வதை நிறுத்திவிடுமாம். இதன் மூலம் ஊழியர்கள் ஷிஃப்டை தாண்டி வேலை பார்ப்பதை குறைக்குமாம். மீறி வேலை செய்ய தொடங்கினால் சென்சர் மூலம் மவுஸின் மேல் பாகத்தில் இருந்து விலகி குட்டி எலியை போல ஓடிவிடுமாம்.
இந்த கிரியேட்டிவ் மவுஸை பயன்படுத்துவோர், வேலை நேரத்தில் அதில் குறித்து வைத்துக்கொள்ளலாம். ஷிஃப்ட் நேரம் முடியும் போது ஆட்டோமேட்டிக்காக அந்த மவுஸ் வேலை செய்வதை நிறுத்திவிடும். இதன் மூலம் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்து வேலை செய்வதை தடுத்து உடலுக்கு சிறிது ரிலாக்சேஷனை கொடுக்க உதவி புரியும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.