ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வருமானவரித் துறை சார்பில் கட்டுபாட்டு அறை தொடங்கி அரசியல் முக்கிய பிரமுகர்களை கண்காணித்து வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதி காலியானதான அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் குவிந்தன.இதனையடுத்து வரி ஏய்ப்பு செய்ததாக தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் ஏப்ரல் மாதம் வருமான வரி சோதனை நடைபெற்றது. சோதனையில் ஆர்.கே.நகர் தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் கிடைத்தன.இதன் காரணமாக தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது.
இதனையடுத்து மீண்டும் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த முறை கணக்கில் காட்டப்படாத பணத்தை பட்டுவாடா செய்வதை தடுக்கும் முயற்சியாக வருமானவரித் துறை 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாடு அறையயை தொடங்கியுள்ளது.தேர்தல் ஆணையம் கேட்டுகொண்டதன் அடிப்படையில் இந்த கட்டுப்பாடு அறை தொடங்கப்படுள்ளதாகவும், 24 மணி நேரம் செயல்படும் கட்டுபாட்டு அறையில் 2 அதிகாரிகள் புகார்களை தொலைபேசி மற்றும் ஃபேக்ஸ் மூலம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வருமானவரித் துறையிடம் பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய அரசியல் பிரமுகர்களின் விவரங்கள் உள்ள நிலையில் அதனடிப்படையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களின் வங்கி கணக்குகளை வருமானவரித் துறை கண்காணித்து வருகிறது.ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து புகார்களை 1800-425-6669 என்ற எண்ணிலும், Itcontrol.chen@gov.in மின்னஞ்சலுக்கும் தெரிவிக்கலாம் என வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.