டிரெண்டிங்

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் நடிகர் ராதாரவி

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் நடிகர் ராதாரவி

webteam

திமுகவில் இருந்து விலகிய நடிகர் ராதாரவி அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்து கொண்டுள்ளார். 

சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய ராதாரவி, நடிகை நயன்தாராவை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். 

இதைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அக்கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நடிகர் ராதாரவி திமுக கட்டுப்பாட்டை மீறும் வகையில் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனால் திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார். 

இதையடுத்து நடிகை நயன்தாரா குறித்து பேசியதற்காக வருத்தம் தெரிவித்து கொள்வதாக நடிகர் ராதாரவி தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் தவறாக எதுவும் பேசவில்லை. அப்படி பேசியிருந்தால் பத்திரிகையாளர்கள் அப்பொழுதே கண்டனம் தெரிவித்து இருப்பார்கள். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

நான் பேசியது மனதை பாதித்துள்ளதால் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவனிடம் மட்டும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் என்னுடைய கலைத்துறையை சேர்ந்தவர்கள். நான் அவர்கள் வீட்டிற்கு சென்று, அல்லது அவர்கள் என் வீட்டிற்கு வந்து எப்படியானாலும் வருத்தம் தெரிவிக்க நான் தயார். என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், நடிகர் ராதாரவி அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்து கொண்டுள்ளார். அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜு உடனிருந்தார். 

ஏற்கெனவே அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ராதாரவி. சைதாப்பேட்டை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்றவர். அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.