பத்திரிகையாளர்களை புண்படுத்தும் எண்ணமில்லை என்றும் அப்படி யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி மிகவும் காட்டத்துடன் பேசினார். பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்விகள் கேட்க, அதற்கு ஆக்ரோஷமாக பதிலளித்தார். இடையில் வேறு ஏதேனும் கேள்விகள் இருக்கா என்றும் கடுகடுப்புடன் பேசினார். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், ரஜினி இன்று தனது ட்விட்டரில், “விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்தப் பத்திரிகை அன்பர்களின் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்” என்று கூறியுள்ளார்.