டிரெண்டிங்

ரஜினிதான் வருங்கால முதல்வர் - அர்ஜுன் சம்பத்

kaleelrahman

மக்கள் மத்தியில் ஆன்மிக அரசியல் எழுச்சி உருவாகிவிட்டது. ரஜினிகாந்த் வருங்கால முதல்வர் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கோவூரில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமான இந்த கோயிலுக்கு சொந்தமாக மாந்தோப்பும், ஏராளமான நிலங்களும் உள்ளது. இந்த இடத்தில் நாகாத்தம்மன் மற்றும் சித்த நாதர் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நந்தவனத்தின் தடுப்பு பகுதிகளை மர்ம நபர்கள் சிலர் உடைத்து எறிந்து விட்டனர். இதனை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேரில் சென்று பார்வையிட்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது என்பது எங்களுக்கு ஏற்புடையது அல்ல. அதை கண்டிக்கிறோம், பொது இடங்கள் மற்றும் கட்சி அலுவலகங்களில் ஈ.வெ.ரா. சிலைகளை வைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. 

அரிசி கடத்தலில் அதிகம் சம்பந்தப்பட்டவர்கள் திமுகவினர். அதனால் தான் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வேளாண் மசோதாவை எதிர்க்கிறார்கள். அவர்களின் பொய் பிரச்சாரம் எடுபடாது என்றவரிடம், பாஜகவில் தேசிய அளவிலான பொறுப்புகளில் தமிழர்கள் இடம்பெறாதது குறித்து கேட்டதற்கு...

பாஜக ஒரு ஜனநாயக கட்சி. ஹெச்.ராஜா இரண்டு முறை தேசிய செயலாளராக இருந்துள்ளார். ஹெச்.ராஜா அற்புதமான இந்து தமிழர்களின் தலைவர். அவருக்கு உரிய மரியாதை கட்சியில் இருக்கும், தமிழகத்திற்கான பிரதிநிதித்துவம் நிச்சயமாக கிடைக்கும் என்றார். ரஜினி அரசியல் குறித்து பேசுகையில்...

ரஜினிகாந்த் தேர்தல் பணியை தொடங்கி விட்டார். ரஜினி மக்கள் மன்றம் சிறப்பாக பணியாற்றுகிறது .திராவிட கட்சிகள்போல் அனைவரையும் ஒன்றிணைவோம் வா எனக் கூறி கொரோனா பரப்பக்கூடாது. வாக்குச்சாவடி வரை பணிகள் நடந்து வருகிறது. மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டனர். மக்கள் மத்தியில் ஆன்மிக அரசியல் எழுச்சி உருவாகிவிட்டது. ரஜினிகாந்த் வருங்கால முதல்வர் என தெரிவித்தார்.