தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்ததால் தான் கலவரம் ஏற்பட்டது என நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்து மனசாட்சியோடு பேசி இருப்பதாகவும் இதனை வரவேற்பதாகவும் அதிமுகவின் நமது அம்மா நாளிதழ் தெரிவித்துள்ளது.
காலிகள் ஒழிப்பும் கபாலியின் வாழ்த்தும் என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் கட்டுரையில், விஷக்கிருமிகளான சமூக விரோதிகளை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒடுக்கி வைத்திருந்தார் என்று ரஜினிகாந்த் கூறியது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்ததால் தான் அது வன்முறை வெறியாட்டமாக வடிவம் எடுத்தது என்ற முதலமைச்சர் பழனிசாமியின் கருத்தையே ரஜினியும் வழிமொழிந்திருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் மறைமுகமாக சுட்டிக்காட்டி இருக்கும் விஷக் கிருமிகளும், சமூக விரோதிகளும் திமுகவினர் தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என அந்த கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது. ராஜினாமா செய்வது என்பது பிரச்னைக்கு தீர்வாகாது என நெத்தியடி பதில் கூறி பதவிப்பித்து பிடித்து அலையும் மாதிரி தலைவர்களுக்கு ரஜினி சரியாக வேப்பிலை அடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் ராஜினாமா செய் என கூறி வரும் கம்யூனிஸ்டுகளுக்கும் ரஜினியின் பதில் புத்தியில் உரைக்க புகட்டப்பட்ட மருத்து என கூறப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் யார் என்பதை கருத்து ஜாடை காட்டி அம்பலபடுத்தி மனசாட்சி குன்றாது மக்களிடம் ரஜினி காந்த் உண்மையை பேசி இருப்பதாகவும் அது வரவேற்கத்தக்கது என்றும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.