மத்திய அரசுடன் நிர்வாக ரீதியிலான இணக்கம் தேவைப்படுவதாகவும் தமிழகத்திற்கான நிதியை இந்திய பிரதமரிடம் கேட்காமல் அமெரிக்க அதிபரிடமா கேட்க முடியும் எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், எத்தனை கட்சிகள் வந்தாலும் களத்தில் இருப்பது அதிமுக, திமுக மட்டுமே எனவும் நாங்களும் லேட்டா வந்தாலும் கரெக்ட்டா அடிச்சிருவோம் எனவும் தெரிவித்தார்.
எங்களது இலக்கு 20 தொகுதிகள் என முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இடைத்தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.
சிறப்பான திட்டங்களை தீட்டி எடப்பாடி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவதாகவும் யாராவது ஆட்சியைப் பற்றி தவறாக கூறுகிறார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் மத்திய அரசுடன் நிர்வாக ரீதியிலான இணக்கம் தேவைப்படுவதாகவும் தமிழகத்திற்கான நிதியை இந்திய பிரதமரிடம் கேட்காமல் அமெரிக்க அதிபரிடமா கேட்க முடியும் எனவும் கேள்வி எழுப்பிய அவர், 20 தொகுதிகளிலும் இரட்டை இலை மலரும் என தெரிவித்தார்.