டிரெண்டிங்

தமிழகத்தில் இதுவரை 23 ஆயிரம் போராட்டங்கள் - ஆர்.பி. உதயகுமார் தகவல்

webteam

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தமிழகத்தில் இதுவரை 23 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாகவும், போராட்டத்தின் வடிவம் மாறும்போது அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.  

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழகர்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. பல்வேறு அரசியல் தலைவர்களும் கடுமையாக சாடினர். பல அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று பார்த்தனர். 

இதனைதொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இவ்வளவு நடந்ததற்குப் பிறகும், முதலமைச்சர் அங்கு சென்று பார்த்து ஆறுதல் சொல்லி, உரிய நடவடிக்கை எடுக்கின்ற முயற்சியில் அவர் ஈடுபடவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார். 

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அமைதியை ஏற்படுத்தவே 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனை அரசே கெடுக்கும் விதமாக இருக்கக் கூடாது என்பதால்தான் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் நாங்கள் யாரும் தூத்துக்குடிக்கு செல்லவில்லை என்று பதில் அளித்தார்.