சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரைக்காக தயார்படுத்தியுள்ள புதிய கார் காண்போரை கவர்ந்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் வரை அரசு வழங்கிய காரை பயன்படுத்தி வந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் அந்த வாகனத்தை அரசிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரைக்காக இனோவா கிரிஸ்ட்டா என்ற புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்தக் காரில் வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமாக பச்சை நிறத்தில் வர்ணம் தீட்டி உள்ளதோடு, இரட்டை இலை சின்னம் ஆங்காங்கே பொறிக்கப்பட்டு 'வெற்றி நடை போடும் தமிழகம்' என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
மேலும் அந்தக் காரில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர், முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. காரின் முகப்பில் விராலிமலை மக்கள் நலன் காக்க விஜயபாஸ்கருக்கு வாக்களிக்க வேண்டிய சின்னம் இரட்டை இலை என்றும் எழுதியுள்ளார்.
விராலிமலை தொகுதியில் தீவிர தேர்தல் பரப்புரையை நாளை அதிகாரபூர்வமாக அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்க உள்ள நிலையில் மக்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் பரப்புரை வாகனம் வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.