டிரெண்டிங்

ஆட்சியை கலைக்க வேண்டும்... ஆளுநரை நியமிக்க வேண்டும்: திருச்சியில் போராட்டம்

webteam

அதிமுக ஆட்சியைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை‌ அமல்படுத்த வேண்டுமென திருச்சியில் மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின்போது, தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டுமெனவும் முழக்கமிட்டனர். இதில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர், அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கூறி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக மக்களை ஏமாற்றி ஊழல் ஆட்சி செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் உடனடியாக பதவி விலக வேண்டும். மக்களை ஏமாற்றி கலவரத்தை தூண்டும் முயற்சிகளை அதிமுக அரசு செய்து வருவதால், ஆட்சியை கலைத்துவிட்டு உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவனர் பொன்.முருகேசன் தலைமையில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பிரதமர் மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் படங்களுடன் கூடிய கண்டன வாசகங்கள் ஒட்டிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.