டிரெண்டிங்

மம்தா கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார் பிரசாந்த் கிஷோர் 

webteam

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வரும் வியாழக்கிழமை மம்தா பானர்ஜி உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை கொல்கத்தாவில் சந்திக்கிறார். 

மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்குப் பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது கட்சிக்கு ஆலோசனை வழங்க அரசியல் ஆலோசகர் பிராசந்த் கிஷோரை நியமித்தார். இது தொடர்பாக இவர்கள் இருவரும் கடந்த மாதம் 7ஆம் தேதி கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும் 2021 மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தலுக்கு கட்சியின் வியூகங்களை வகுக்கும்படியும் பிரசாந்த் கிஷோரிடம் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் வரும் வியாழக்கிழமை பிரசாந்த் கிஷோர் தனது ஆய்வு குறித்து ஒரு விளக்கவுரை அளிக்கவுள்ளார். கொல்கத்தாவிலுள்ள ஒரு அரங்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்கின்றனர். இக்கூட்டத்தில் மேற்கு வங்க மாநில சட்டப் பேரவை தேர்தல் வியூகம் குறித்தும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்வி குறித்தும் விவாதிக்கப் படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக 2019 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 42 இடங்களில் 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப்பெற்றது. ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அக்கட்சி 34 இடங்களில் வெற்றிப் பெற்றிருந்தது. அதேசமயம் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 2 இடங்களில் மட்டும் வெற்றிப் பெற்றிருந்த பாஜக 2019ல் 18 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.