டிரெண்டிங்

2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்

kaleelrahman

மாணவனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முதல்கட்டமாக ஒரு லட்சம் ரூபாயை வேலூர் மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது. 

வேலூர் மாவட்டம் சலவன்பேட்டையை சேர்ந்த சரவணன்-கலா தம்பதியினரின் மூத்த மகன் ரவி (18). சரவணன் சாஸ்திரி நகரில் தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மகன் ரவி குழந்தைப் பருவத்திலிருந்தே சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். நாளடைவில் இந்த பாதிப்பு முற்றி இரண்டு சிறுநீரகமும் செயலிழந்துள்ளது.

இந்நிலையில் அந்த இளைஞனின் பெற்றோர் பல ஆண்டுகளாக தங்களது சொந்த செலவில் மாதம் ரூ.60 ஆயிரம் செலவழித்து வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து வந்தனர். ஆனால், நாளடைவில் நிலைமை இன்னும் மோசம் ஆகவே அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்ததோடு அறுவை சிகிச்சைக்கு 12 லட்சம் வரை செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.

மகனுக்காக தங்களது சிறுநீரகத்தை தானம் செய்ய பெற்றோர் முன்வந்த நிலையில் அதற்கான பண வசதி அவர்களிடம் இல்லை. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சிகிச்சைக்கான பணத்தை தங்களால் திரட்ட முடியாமல் அரசு சார் அமைப்புகளையும், தொண்டு நிறுவனங்களையும் நாடிவருகின்றனர். இதனிடையே வேலூரில் உள்ள நடிகர் விஜய் மக்கள் இயக்கம், ரவியின் அறுவை சிகிச்சைக்கு உதவும் வகையில் நிதி திரட்ட முடிவு செய்தது.

மேலும் நடிகர் விஜயின் உத்தரவின்படி வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் வேல்முருகன் முதல் கட்டமாக ரூபாய் 1 லட்சத்தை ரவியின் பெற்றோரிடம் வழங்கினார். மேலும் தங்களால் முடிந்த அளவு தொகையை தங்களது மக்கள் இயக்கம் மூலம் திரட்டி இளைஞரின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவ இருப்பதாகவும் தெரிவித்தனர்.